Saturday, January 12, 2019

2005 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு பாடல் சில மேடைகளில் பாடப்பட்டு பின் மகளிர் சிந்தனை என்னும் இடதுசாரி இதழில் மார்ச் 2006 இல் வெளிவந்தது

2005 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு பாடல் சில மேடைகளில் பாடப்பட்டு பின் மகளிர் சிந்தனை என்னும் இடதுசாரி இதழில் மார்ச் 2006 இல் வெளிவந்தது
பெண் சிசுவுக்கொரு தாலாட்டு
பல்லவி
தாலேலோ இளங்கிளியே
என்னாச்சு அழுவுறியே
காலாலே உதைக்குறியே
பாடாக படுத்தறியே
என்னன்னு நானும் பாட
என் நெஞ்சத்தை நெருப்பு வாட்ட
சரணம் 1
பீடியால சூடு வெச்ச உங்கப்பன் கதை சொல்லட்டா.....
பொட்டையினு குட்டி வெச்ச எங்கப்பன் கதை சொல்லட்டா.....
பள்ளிக்கூடம் போனபோது என் பாட்டன் அடக்கி வெச்சான்....
பட்டிணத்தில் படிச்ச தம்பி பட்டிக்காடுனு ஒதுங்கி நின்னான்.....
வரதட்சணை தரமுடியாம நாலு வரன் தள்ளிப் போச்சு.....
குடிகாரனுக்கு வாக்கப்பட்டு உடம்பெல்லாம் வெந்துப் போச்சு.....
பொட்டைக்கோழி முட்டைக்குத்தான் பழமொழி நெசமாச்சு....
பட்டித்தொட்டி எங்கும் பெண்ணின் நிலை இதுவாச்சு.....
சரணம் 2
சொல்லால ஆணியடிச்ச உன் பாட்டிக் கதை சொல்லட்டா.....
மருமகளை அறுத்துவிட்ட உன் பாட்டன் கதை சொல்லட்டா...்
பேச்சுவாக்கில் கொழுந்தியாள் கள்ளிப்பால் கொடுக்கச் சொன்னாள்.....
அடுத்த வீட்டு முனியம்மாவோ நெல்லுமணி கொடுக்கச் சொன்னாள்....
மனவருத்தம் தாளவில்லை அரளி விதை அரைச்சி வெச்சேன்.....
பச்சை மண்ணை பார்த்து பார்த்து வைராக்கியம் வளர்த்துக் கிட்டேன்.....
பொட்டப்புள்ள அடுப்பு ஊதத்தான் சொன்னவனை நாவறுக்கணும்-நீ பட்டமெல்லாம் படிச்சு படிச்சு பெரியவளானதும் நாடாளணும்.....

No comments:

Post a Comment