Friday, January 31, 2020

நேற்று ஓர் சூரியன்

பல்லவி

நேற்று ஒரு சூரியன்

என்னை சுட்டெரிக்காமல் நனைத்ததென்ன

 இன்று ஒரு சந்திரன்

என்னை குளிர்விக்காமல் சுட்டதென்ன

பல நூறு ஆண்கள் செல்லும் பாதையில்

இவன் மட்டும் பளிச்சென்று தெரிந்ததென்ன

பற்பல ஆண்கள் கடந்த வாழ்க்கையில்

இவன் மட்டும் சட்டென்று கவர்ந்ததென்ன

நெஞ்சை பிளந்ததென்ன

சரணம் 1

பற்பசை விளம்பரம் செய்பவனா

பளீரென சிரிக்கின்றான்

சொற்களை வியாபாரம் செய்பவனா

கவிஞனாக தெரிகின்றான்

இதயத்தைப் பறித்தானே

வழிப்பறி கொள்ளையனோ

மனதை கவர்ந்தானே

கண்ணம் வைப்பவனோ

குருதியில்  தீ மூட்டி ரசிக்கும் கலவரக்காரனோ

என்னை நான் மறந்தேன்

வைத்தியக்காரன் இவன் தானோ

பெண்ணை கண்டுகொள்ளாத பைத்தியக்காரனா

கொஞ்சம் ஒதுங்கி இருக்கும் பத்தியக்காரனா காதல் பதியக்காரனா

சரணம் 2

பூக்களை பறித்து விற்பவனா

இதழ்களை பறிக்கிறான்

கற்களை விற்பனை செய்பவனா

கல்நெஞ்சனாக இருக்கிறான்

மயக்கத்தைக் கொடுத்தானே

மது விற்பனையாளனா

எதையோ எதிர்பார்த்தானே

அரசாங்க ஊழியனா

சுருதியில்  பெயர் சொல்லி அழைக்கும்

இசை அமைப்பாளனா

கிறக்கத்தில் என்னவோ நான் செய்தேன் கிராதகன் இவன் தானா

பெண்ணை  தவிக்க வைக்கும் தந்திரக்காரனா

நாற்புரத்தில் அலைய வைக்கும்  நாசக்காரனா நாளையென் சொந்தக்காரனா

Thursday, January 30, 2020

விதியென்னும் குழந்தை

பல்லவி

விதியென்னும் குழந்தை விளையாடும் விளையாட்டு பொம்மை உலகம்

சந்தர்ப்ப சூழ்நிலை சதிராடும்

சதுரங்க அட்டை வாழ்க்கை

ஏணிக்கும் பாம்புக்கும் நடுவே

உதைபடும் பந்து மனிதன்

ஏட்டிக்கும்  போட்டிக்கும் நடுவே

மிதிபடும் ஜந்து மனிதன்

பரமனை ஆடும் பரமபதம்

இதில் வெற்றியை சுவைப்பது பரமசிவம்

சரணம் 1

கண்ணீரில் பிறந்து கண்ணீரில் முடியும் மண் வாழ்வு

இதில்

தண்ணீரில் மிதந்து தத்தளிக்கும் சிறு எறும்பு நம் வாழ்வு

பன்னீரில் குளித்து பணநீரில் மிதக்கும் சிலர் வாழ்வு

மலர்

மஞ்சத்தில் புரண்டு மருந்துண்டால் தானே நல்லிரவு

வேர்வையில் கரைந்து வெக்கையில் புழுங்கும் விவசாயி

குடிப்பது

கூழ் என்றாலும் மோர் என்றாலும் சுகவாசி

பலதேசம் செல்வதும் பலகாரம் தின்பதும் யார் செயலோ

பல தோஷம் பார்ப்பதும் பழஞ்சோறு தின்பதும் யார் செயலோ

மனிதன் காற்றிலாடும் காத்தாடி ஆட்டுவிக்கிறான் ஒரு கூத்தாடி

சரணம் 2

அச்சத்தில் பிறந்து அச்சத்தில் முடிக்கும் நம்வாழ்வு

நாம்

நம்பிக்கை இழந்து அஞ்சி வாழும் வெந்த சுண்ணாம்பு

உச்சத்தில் கொடுத்து புண்ணியம் தேடும்

சிலர் வாழும்

அதில் மிச்சத்தை சேர்த்து சொத்து ஆக்குவது தானே நிலைப்பாடு

மஞ்சத்தில் மலர்ந்து மஞ்சத்தில் கருகும் விபச்சாரி

செய்வது தவறு என்றாலும் சரி என்றாலும் சன்யாசி

வெளிவேடம் அணிவதும் உள்நோக்கம் கொள்வதும் யார் செயலோ

மகான் என்று சொல்வதும் பகல் கொள்ளை அடிப்பது யார் தவறோ

மனிதன் காற்றிலாடும் ஒரு காத்தாடி

ஆட்டுவிக்கிறான்  ஒரு கூத்தாடி