Friday, August 22, 2025

வாடி வாடி மிருதுளா-



                    பல்லவி
வாடி வாடி மிருதுளா-அட
வெட்கம் என்ன இடைஞ்சலா
வாடி வாடி வெண்ணிலா-நான்
வாடிப்  போனேன் வத்தலா
பட்டாகத்தி கண்களால் என்  பட்டத்துராணி வெல்கிறாள்
பல்லாங்குழி கன்னத்தில் மனம் சரிய கண்டு ரசிக்கிறாள்
மருதாணி பூசிய விரலால் மனதை கிள்ளி போகின்றாள்

                சரணம்-1
என்ன சொல்வதோ உன்னை என்ன சொல்வதோ
சிரிப்பாலே ஆளை கொல்லும்
கொல்லிப்பாவை என்பதோ
கொல்லிப்பாவை என்பதோ

என்ன ஆவேனோ நானும் என்ன ஆவேனோ
உன்னாலே உலகை மறந்த
கிறுக்கன் ஆவேனோ-காதல்
கிறுக்கன் ஆவேனோ

பொல்லாத பார்வையாலே நெஞ்சை புண்படுத்தினாய்
சொல்லாத சொற்களாலே என்னை துன்புறுத்தினாய்
பொய்யான கோபம் காட்டி காயப்படுத்தினாய்
மெய்யான நேசத்தை ஏற்க ஏனோ மறுக்கின்றாய்

நெஞ்சத்தின் உள்ளேவந்து நஞ்சை தடவி போகின்றாய்

                   சரணம்-2
மச்சம் என்பதா இதை மச்சம் என்பதா
அழகான கோலத்தில் விடுபட்ட
புள்ளி என்பதா
புள்ளி என்பதா

சொர்க்கம் என்பதா இதை நரகம் என்பதா
திரிசங்கு சொர்க்கம் என்று
காதலை சொல்லவா –பொல்லா
காதலை சொல்லவா
ஐந்தடி அழகு சிற்பம் ஆளை கொல்லுதே
அய்யய்யோ அணுக்கள் எல்லாம் கூப்பாடு போடுதே
வெடிகுண்டு பார்வைகளை விழிகள் வீசுதே
இடிதாங்கும் இதயம் கூட தூளாகி போகுதே

உள்ளத்தின் உள்ளே வந்து காதல் சாரல் வீசுகிறாய்